சலனங்களோடு
ஏற்றிக்கொண்ட நினைவுகளை
சத்தமின்றி அசை
போடுகிறேன் ...
பயணங்கள் –
உடலை மட்டுமே
இடம் பெயர்க்கின்றன...
எண்ணங்களை கடத்த
எவற்றாலும்
முடியவில்லை...
நெஞ்சின்
நினைவுகள்-
மையத்தை சுற்றும்
கடிகார முட்கள் போல்...
திரும்பும் திசை
எதுவாகினும்
குவிமய்யமாய்
எப்போதும் நீ!!
கிளம்பும்
தருணத்தில் நிகழ்ந்த சிறு ஊடல் தந்த வலியும்
நினைவுகளின் உடன்
வருகிறது...
ஏதேனும் ஒரு
நிறுத்தத்தில்
வலியை
இறக்கிவிட்டு
நினைவுகளை
மட்டும் உடன் சுமக்க விழைகிறேன்....
ஏனோ நிறுத்தங்கள்
வரும் போது மனதின் கதவுகள் இறுக்கமாய் மூடிக்கொள்கின்றன...
இறக்க நினைக்கும்
வலியோ
உள்ளிருக்கும்
நினைவுகளை துளைத்து
உட்சென்று
குடியமர்கின்றது...
மெல்லப்
புரிகிறது
வலியின் இருப்பு
நினைவுகளின்
சுகத்தை அதிகரிப்பது...
வலியின் ஊடாக
எட்டிப்
பார்க்கும் நினைவுகள்
தரும் கணமான
சுகம்
உயிரை முழுதாக
நிரப்புகிறது ...
நிரம்பிய உயிர்
..
நிலைத்த
எண்ணம்...
இவற்றுடன்
உனக்கான
காத்திருப்பில்
நான்...!!
ஆண்கள் பெண்களைப் பற்றி எழுதும் கவிதைகளை விட,பெண்கள் ஆண்களைப் பற்றி எழுதும் கவிதைகளே அழகாக இருக்கின்றன...
ReplyDelete